வரவிருக்கின்ற 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருக்கும் தமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலன் தனது சின்னமான "சைக்கிள்" சின்னத்திற்கு வாக்களிக்கும்படி, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கொளுத்தும் வெயிலில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையொட்டி, பாஜக கூட்டணி வேட்பாளர் விஜயசீலனுக்கு கட்சியினர் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் விஜய சீலன், "2G ஊழல் வழக்கு தற்போது மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது... எத்தனை நாள் கனிமொழி இங்கிருப்பார் என்று தெரியாது" என்றும், "திமுக-னாலே ஊழல்தான்" என்றும் கூறி திமுகவையும், அவர்கள் கொடுத்த வாக்குறுதி பற்றியும் விமர்சித்து பேசினார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி 3-வது முறையாக வரவேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன், மாவட்ட செயலாளர் சக்தி குமார், விளாத்திகுளம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தலைவர்கள் பார்த்திபன், கனகவேல் ராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் சுயம்பு, மாவட்ட அணி பொறுப்பாளர்கள் கந்தசாமி மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக