இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள 2024 பாராளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் தங்களின் கட்சி தலைமையிடம் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போதைய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஏற்கனவே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக கனிமொழி மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் 32 விருப்ப மனுக்களும், வடக்கு மாவட்டம் சார்பில் 13 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்டோர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ரூபாய் 50,000 செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்றுள்ள நிலையில், தமிழக முழுவதும் திமுக சார்பில் போட்டியிட 200க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கு முன்னதாக அனைவரும் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



உங்கள் கருத்தை பதிவிடுக