காணவில்லை! காணவில்லை ! வட்டார போக்குவரத்து ஆய்வாளரை காணவில்லை?: விளாத்திகுளம் நகர் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மின்னல் வேகத்தில் இயக்கப்படும் டிராக்டர் வாகனங்கள்!
உரிய பாதுகாப்பு இல்லாமல் டிராக்டர் வாகனங்களை எடுத்துச் செல்லப்படும் கரம்பை மண் : ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் கரம்பை மண்ணால் அடிக்கடி விபத்து!
கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி, விவசாய நிலங்களுக்கு கரம்பை மண் எடுப்பதற்கும், நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி, தண்ணீரை தேக்குவதற்காகவும் குடிமராமத்து பணி என்ற திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்டது .
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் சில நாட்களாக குடிமராமத்து திட்டப்பணி என்ற பெயரில் வருவாய் துறை மூலமாக அனுமதி பெற்று, கண்மாயில் உள்ள கரம்பை மண்ணை அள்ளி கட்டுமான நிறுவனங்களுக்கு ஒரு டிராக்டர் லோடுக்கு ரூபாய் 500 முதல் 600 வரை வருவாய்த்துறை அனுமதியோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிராக்டர் வாகனம் மூலமாக கரம்பை மண்ணை எடுத்து செல்லும் டிராக்டர் வாகன ஓட்டுநர்களுக்கு முறையான ஓட்டுனர் உரிமம் இல்லை என்றும்,பெரும்பாலான டிராக்டர் வாகன ஓட்டுநர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
விளாத்திகுளம் பொதுப்பணித்துறை கம்மாயில் இருந்து டிராக்டர் மூலம் எடுத்துச்செல்லப்படும் கரம்பை மண் வாகனங்கள், விளாத்திகுளம் முக்கிய நகர் பகுதியில் அசுர வேகத்தில் சென்று அடிக்கடி விபத்து ஏற்படுத்துவதாகவும், எந்தவித ஒரு பாதுகாப்பு இல்லாமல் கரம்பை மண்களை வாகனத்தில் எடுத்துச்செல்வதால், வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுது கரம்பை மண்கள் சாலைகளில் ஆங்காங்கே சிந்துவதால், லேசான மழைக்கே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இருசக்கர வாகனாக ஓட்டிகளை வாகன தணிக்கை நடத்தி "பாய்ந்து பாய்ந்து" பிடிக்கும் விளாத்திகுளம் போலீசார், தறிகெட்டு அதிவேகத்தில் செல்லும் டிராக்டர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்துவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்து குறித்து நாளிதழில் செய்தி வெளியாகியும் வருவாய்த்துறை, காவல்துறை, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக போக்குவரத்து ஆய்வாளரை காணவில்லை என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் டிராக்டர் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக