கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார் : அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த மீனவ கிராம மக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் மீனவ கிராமங்களில் திடீரென தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மழை நேரங்களிலும், அதிகமாக வீசும் காற்றின் காரணமாக, கடற்கரையில் கட்டப்பட்டுள்ள நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சேதம் அடைந்து வருகின்றது, முகத்துவாரப்பகுதி முறையாக தூர் வாராததால் கடல் நீர் கிராமத்துக்குள் உள்புகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடலில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவு போதுமானதாக இல்லாத காரணத்தினால் தான் கடற்கரைப் பகுதியில் அதிக காற்று வீசி படகுகள் சேதம் அடைந்து வருவதாகவும், கீழவைப்பாரில் புதிதாக போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை 100 மீட்டர் அதிகரித்தும், சிப்பிகுளத்தில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை 200 மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் குளத்தூரில் இருந்து சிப்பிகுளம் வரும் சாலை மிகவும் மோசமாக குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என்றும்,படித்த மீனவ கிராம இளைஞர்களுக்கு உரிய வேலை வசதி செய்து தர வேண்டும் என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர்,அதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் உங்களின் அனைவரின் கோரிக்கைகளையும் மனுவாக எழுதித் தருமாறு கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம்,தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்டச்செயலாளர் மகேஸ்வரன், மாவட்டத் துணைச்செயலாளர் எபநேசர்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் திவான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீனா, செண்பகராஜ்,மாவட்ட தகவல் தொடர்பு அணி சண்முகராஜ்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கமாரியப்பன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி,கீழவைப்பார் கிளை நிர்வாகிகள் தியாகு, பூபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக