எட்டையாபுரம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதல் - இருவர் உயிரிழப்பு - 15 பேர் படுகாயம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கிளம்பி உள்ளனர். வேனை டிரைவர் சசிகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே தாப்பாத்தி - முத்துலாபுரம் மேம்பாலம் இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது. வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேனில் வந்த விஜயன்(58), மற்றும் கலைவாணி என்பவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணித்த டிரைவர் சசிகுமார் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதால் காயம் அடைந்தவர்கள் உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதையெடுத்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக