கோவில்பட்டியில் சிறுவர்கள் விளையாட்டுப் பொருளாகப் பயன்படுத்தும் போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மீன் கடைக்காரரிடம் சில்லறை பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன், அப்பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள், ரூ.500 நோட்டு ஒன்றைக் கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். அவரும் அந்த நோட்டைப் பெற்றுக்கொண்டு சில்லறைப் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய் நோட்டைச் சரிபார்த்த போது, அது அசல் நோட்டு அல்ல என்பதும், சிறுவர்கள் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் போலி 500 ரூபாய் நோட்டு என்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சதாம் உசேன், உடனே அந்த நபர்களைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த அந்த 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், போலி பணத்தைக் கொடுத்து மோசடி செய்ய முயன்ற விளாத்திகுளம் சுப்பையாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த ராம்குமார் (35), விரிசம்பட்டியைச் சேர்ந்த ராஜி (28) மற்றும் குளத்தூரைச் சேர்ந்த சுரேந்தர் (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக