1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற போக்குவரத்து காவல்துறையினர்!

தமிழகம் முழுவதும் இன்று 1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் இனிப்பு மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் சாலையை கடக்கும் போது வாகனங்கள் வருகிறதா என்பதனை பார்த்து கடக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினர்,
கொடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புது ரோட்டில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கோவில்பட்டி போக்குவரத்து காவல்துறையினர் இனிப்பு மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்து கடக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.