உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு - பிளாஸ்டிக் ஒழிப்பு - துணிப்பை அவசியத்தினை வலியுறுத்தி கோவில்பட்டியில் சிலம்பாட்டத்துடன் நடைபெற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி!
சுற்றுச்சுழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 5ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் என்பதால் கோவில்பட்டியில் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் மற்றும் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட் சார்பில் இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துணிப்பை உபயோகத்தினை வலியுறுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் பேரணியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு மரக்கன்றுகள், துணிப்பை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி விழிப்புணர்வு பேரணி எட்டயபுரம்சாலை, புதுரோடு வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது. ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணிக்கு முன்பு மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடியாவறு அசத்தி சென்றனர். மேலும் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன், சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன், செயலாளர் யுவராஜன், மாவீரன் பகத்சிங் ரத்த தான கழக நிர்வாகி காளிதாஸ், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஞானவேல் நாகராஜ் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.