சூரங்குடியில் குடிநீர் பிரச்சினை : காட்சிப்பொருளாக இருக்கும் "குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்" : மக்களின் தாகம் தீர்க்குமா? மாவட்ட நிர்வாகம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி: சிலோன் காலணியில், புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக இருக்கும் ரூ.8 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட "குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை" பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்களது தாகம் தீர்க்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் சிலோன் காலணி என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருப்பதனால் இங்குள்ள மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரையே நம்பியுள்ளனர். ஆனால் அவ்வாறு வழங்கப்படும் சீவலப்பேரி குடிநீரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர் இப்பகுதி மக்கள். இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10லிருந்து ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்...

இந்த சூழ்நிலையில் இம்மக்களின் நலன் கருதி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8 இலட்சம் மதிப்பில் இந்த சிலோன் காலனியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட "குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்" அமைக்கப்பட்டது.

நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த "குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்" அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் மெத்தனப்போக்கினால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல்.... வேலிச்செடிகள், குப்பைகள் என புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டிய சீவலப்பேரி குடிநீரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே வழங்குவது, சுத்திகரிப்பு நிலையத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது என சூரங்குடி ஊராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களை குடிதண்ணீருக்காக பல ஆண்டுகளாக தவிக்கவிட்டு அலட்சியப்போக்கில் செயல்பட்டு வருகிறது.

இதில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலையிட்டு செயல்பாட்டிற்கு வராமல் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதோடு மட்டுமின்றி மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படும் சீவலப்பேரி கூட்டு குடிநீரையும் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.