கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி அக்னி சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி! தமிழகத்தில் கந்துவட்டி, வாரவட்டி, தின வட்டி என ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.40 ஆயிரம் வட்டி வசூல் செய்வது கொடிகட்டி பறக்கிறது. இதனால் ஏழை எளிய கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும், கந்துவட்டி தொழிலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி., மேயர், நகரசபை, ஒன்றியக்குழு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். துப்பரவு தொழிலாளர்கள் கந்துவட்டி மாபியாக்கள் பிடியில் உள்ளனர்.அவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை யார் பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கந்துவட்டி ஆபரேஷனை வேகப்படுத்த வேண்டும், என்பதனை வலியுறுத்தி  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கையில் அக்னி சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தனது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் ஜெயாவிடம் வழங்கினார்.