"எங்கேயோ இருந்து வந்தவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க... எங்களுக்கு ஏன் பண்ண மாட்டிக்காங்க?" - காலிக்குடங்களுடன் பெண்கள் ஆவேசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இருந்து சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சீவலப்பேரி மற்றும் குடிநீர் பைப் லைன்கள் செல்லும் பாதையின் மீது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் தங்களது வாகனங்கள் செல்வதற்காக சரளை மண் கொட்டி பாதை அமைத்து சென்று வருகின்றனர். இதன் காரணமாக அந்த பைப் லைன்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்நத்தம், கே.குமரெட்டியபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களுக்கு பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று காலி குடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பைப் லைன் செல்லும் பாதையில் கொட்டப்பட்ட சரளை மணலை அப்புறப்படுத்தி பாலம் அமைத்து வேண்டுமானால் காற்றாலை நிறுவன வாகனங்கள் செல்லட்டும் என கூறுகின்றனர். அதேபோன்று தங்களது குடிநீர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.