திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 1 ½ பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 03.06.2023 அன்று தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தபோது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி பெண்மணி அணிந்திருந்த 1 ½ பவுன் தங்க வளையல் கடலில் விழுந்துள்ளது.
உடனே அங்கு இருந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான ரத்தினம் மகன் மணிகண்டன் (30) மற்றும் செந்தில்குமார் மகன் ஆறுமுகநயினார் (25) ஆகிய இருவரும் மேற்படி பெண்மணியின் கடலில் விழுந்த 1 ½ பவுண் தங்க நகையை கடலில் தேடி நேற்று (04.06.2023) கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி தங்க வளையலை கடலில் தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த மேற்படி மணிகண்டன் மற்றும் ஆறுமுகநயினார் ஆகிய இருவரையும் இன்று (05.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் அவர்கள் திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.