ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் தமிழக முதல்வர் கல்வி வளர வேண்டும் என்பதற்காக 35 ஆயிரம் கோடி கல்வித்துறைக்காக ஒதுக்கி இருக்கிறார். மேலும் அரசு பள்ளி எல்லா வகையிலும் உயர வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்காக 7.5% இட ஒதுக்கீடு தந்து மருத்துவராக இன்ஜினியராக உயர்கல்வி பயின்றிட வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆழ்கடலில் சென்ற மீன் பிடிக்கும் மீனவர்களில் சிறந்த மீனவர்கள் தருவைகுளம் மீனவர்கள் அவருக்கு அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், எல்லா பள்ளிகளிலும் விழா ஆரம்பிக்கும் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடுவது வழக்கம். அதேபோல் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதற்காக சில குழந்தைகளை மேடையில் ஏற்றி பாடுவது வழக்கம். ஆனால் இந்த தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேடையில் நான்கைந்து குழந்தைகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினாலும், அனைத்து குழந்தைகளும் ஒருங்கிணைந்து பாடியது மாவட்டத்தில் இதுதான் முதல் முறை மேலும் தருவைகுளம் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் அதேபோல் அவர்களது குழந்தைகளையும் ஒழுக்கமாக வளர்த்து இருக்கிறார்கள்.அதற்கு என்னுடைய பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி பள்ளி தலைமை ஆசிரியர்அண்டோ ரூபன் வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா பஞ்சாயத்து தலைவர்கள் காடோடி அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்...