கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள்  உடல் கருகி பரிதாபமாக பலியானார். அவரது குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.4½ லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.மீதித்தொகையான ரூ.1½ லட்சத்தை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மூதாட்டியின் மகள்கள் குடும்பத் தினருடன், சி.ஐ.டி.யு. அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் தெய்வேந்திரன், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்முருகன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முத்துக்காந்தாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் ரூ.1½ லட்சத்திற்கான காசோலையை வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மூதாட்டி குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் நாகலெட்சுமி உடனிருந்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.