ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பெங்களூர் பக்தர் உடல்நிலை  பாதிக்கப்பட்டு திடீரென கடலுக்குள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பெங்களூர் பக்தர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு கடலுக்குள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்  கடலில் மயங்கி விழுந்து கடல் நீரை குடித்த பக்தரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா  உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

 ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி நீண்ட வரிசை நின்று  சுவாமி தரிசனம் செய்து பின் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் பெங்களூர் மாநிலம் வயலிக்கவல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்து தங்கி இன்று காலை ராமநாதபுரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடுவதற்கு கடலில் இறங்கியுள்ளார்.அப்போது அவருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கடலில் மயங்கி விழுந்து கடல் நீரை அதிகம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார்.இதையடுத்து கடலில் அருகில் புனித நீராடி கொண்டிருந்த  பக்தர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய போது பக்தர் ஒருவர் கடலுக்குள் மயங்கி விழுந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.