கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் (தற்போது எயினர் என அறியப்படும் சாதி இல்லை.ஆயினும் மறவர்கள் உள்ளனர்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர் .கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி,முல்லை,பாலை நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. கொற்றவை மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.சிலப்பதிகார மதுரையில் மீனாட்சி கோவில் இல்லை கொற்றவை கோட்டம் உண்டு,மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  வைப்பார்-கோட்டைமேடு கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி கோவில் வளாகத்தில்  பழமையான சிற்பம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து , அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் வேம்பார் குணசேகரன் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும்  நகரத்தினம் அங்காளம்மன்  அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் தாமரைக்கண்ணன்  ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றி அவர்கள் கூறியதாவது  ஆரம்ப காலங்களில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு  வைத்து கட்டப்பட்ட  கோவில்களே அதிகம் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த  கோவில்கள் இடிந்து  அழிந்து  விடுகின்றன.  ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குடைவரை கோவில்கள் அமைக்கும் வழக்கம் தமிழகத்தில் பரவ ஆரம்பித்தது.  வட தமிழகத்தில் பல்லவர்களும்  தென் தமிழகத்தில்  பாண்டியர்களும் இவ்வகை கோயில்களை மிகச் சிறப்பாக செய்வித்தனர்.தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 120 க்கும் மேற்பட்ட குடவரை கோவில்கள் குடைப்பட்டன.  குடவரை கோவில்கள் என்பது பாறைகளை குடைந்து கோவில்கள் எழுப்பும் வழக்கமாகும்.  எட்டாம்  நூற்றாண்டின் மத்தியில்  கற்றளி அமைக்கும் வழக்கம் ஆரம்பித்தது. கற்றளி என்பது கற்களை பயன்படுத்தி கோவில்கள் கட்டும் பழக்கமாகும்.  ஆரம்ப காலங்களில் கட்டப்பட்ட கோவில்களில் இறைவன் இருக்கும் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் ஆகிய இரண்டு மட்டுமே கோயிலில் இடம்பெற்றன.   குடைவரை கோவில்களிலும்  கற்றளிகளிலும் அதிகமாக  சிவபெருமானுக்கு தான் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு கட்டப்படும் கோவில்களில் அம்மனுக்கு என்று தனி சன்னதி கிடையாது.  விநாயகர் சன்னதி முருகன் சந்நிதி சப்த மாதர் சன்னதி சண்டிகேஸ்வரர் சன்னதி என்று தனித்தனியாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் சிறு கோவில்கள் அமைக்கப்பட்டன.  இந்த கோவில்களில்  சிவ வழிபாட்டிற்கு பிறகு அதிகமாக கொற்றவை வழிபாட்டிற்கு தான்  அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஆரம்ப காலங்களில் இருந்து தாய் தெய்வ வழிபாட்டிற்கு நமது தமிழ் மக்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.  இந்த தாய் தெய்வ வழிபாட்டில் கொற்றவை வழிபாடும் ஒன்று.  வடதமிழகத்தில்   செதுக்கப்பட்ட கொற்றவை சிற்பமானது எட்டு கரங்களுடன் காட்சி அளித்தது.  ஆனால் பாண்டிய நாட்டில் செதுக்கப்பட்ட பெரும்பாலான கொற்றவை சிற்பங்கள் நான்கு கரங்களுடன் காட்சியளித்தன.  ஒரு சில இடங்களில் மட்டுமே எட்டு கரங்களுடன் மிகப் பிரமாண்டமாக காட்சியளித்தன.  இங்கு காணப்படும்  கொற்றவை சிற்பமானது நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறது நான்கடி உயரத்திலும் இரண்டடி அகலத்திலும் மிகவும் அழகாக காட்சி தருகிறாள் கொற்றவை அன்னை..  சிற்பத்தின் மகுடம் கரண்ட மகுடம் ஆகும். இந்த கரண்ட மகுடம் என்பது உருளையான , கூர்மையான  வடிவத்தில் காணப்படுவது ஆகும்.  இரண்டு காதுகளிலும் பத்திர குண்டலம் காணப்படுகிறது. வலது மேல் கரத்தில் காணப்படும் சக்கரமானது பிரயோக கோலத்தில் காணப்படுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். சிற்பத்தின் இடது  மேல் கையில்  சங்கு காணப்படுகிறது.  வலது கீழ்க்கையானது அபய ஹஸ்தத்திலும்  இடது கீழ் கையானது கடி ஹஸ்தத்திலும் காணப்படுகிறது கடி என்பது இடுப்பை குறிக்கும்.  இந்த சிலையானது மிகவும் தேய்ந்து , சிதைந்து காணப்படுகிறது.  இந்த சிற்பத்தின் அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த சிற்பத்தின் காலம்  எட்டாம் நூற்றாண்டு ஆகும்.  இது போன்ற பழமையான சிற்பங்கள் நமது பகுதியில் அரிதாகவே காணப்படுகிறது. கொற்றவை சிற்பம் தூத்துக்குடி மாவட்டத்திலே இக்கோவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் ,இதை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.