விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை‌ வாயந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மீனாட்சியம்மனுக்கு "ஆடிப்பூரம் வளைகாப்பு விழா" - திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம்!ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள் என்பதால், திருவாடிபூரம் பெண்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.மங்கையர்களுக்கு அரசியான இந்த அம்மனுக்கு; பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதைப்போலவே, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. இந்நிகழ்ச்சியில் திருமணத்தடை உள்ள கன்னிப்பெண்கள் திருமணவரன் வேண்டியும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தைச் செல்வம் கேட்டும் அம்பாளின் அருள் பெறுவதற்காக இந்த வளையல் சாற்றும் வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். இவ்வளவு சிறப்புகள் பெற்ற "ஆடிப்பூர வளைகாப்பு விழா" ஆண்டுதோறும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதில் உள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் கூட்டத்துடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று காலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு உற்சவர், மூலவருக்கு அர்ச்சனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அம்பாளுக்கு வளையல் சாற்றும் இந்த ஆடிப்பூரம் வளைகாப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அம்பாளின் 'வளைகாப்பு விழாவை' முன்னிட்டு 5 வகையான சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.