விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு : புதிய X-Ray இயந்திரம் உடனடியாக வழங்க டி.எம்.எஸ்-க்கு செல்போனில் அழைத்து உத்தரவு! தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அதிரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இம்மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பழமையான X-ray இயந்திரம் செயல்படாமல் இருப்பதைக் கண்டு உடனடியாக சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் அழைத்து இங்குள்ள X-ray இயந்திரம் பயன்படாமல் காட்சி பொருளாகி உள்ளது.. உடனடியாக மருத்துவமனைக்கு நவீன X-ray இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு, உள்ள மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சமையல் கூடம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி, இம்மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சுரேஷ்குமாரிடம் சராசரியாக மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும், இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய கட்டிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்துச் சென்றார்.