தூத்துக்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாமில் தரையில் தவழ்ந்து வந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று கால் சக்கர வாகனம் வழங்க அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  இதில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை பார்வையிட வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ்,  முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் தங்களுடைய குறைகளை கேட்டு அறிந்தனர்.அப்போது முகாமில் தரையில் தவழ்ந்து வந்த  மாற்றுத்திறனாளி பெண்ணை அமைச்சர் கீதா ஜீவன் பார்த்து உடனடியாக அவருக்கு கை கவசம் வழங்க உத்தரவிட்டார். அப்போது அந்த மாற்றுத்திறனாளி பெண் நான் பலமுறை மனு அளித்தும் இதுவரை தனக்கு மூன்று கால் சக்கர வாகனம் மற்றும் எந்தவித அரசு நலத்திட்டமும் வழங்கவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தகுதிக்கு ஏற்ற  மூன்று கால் சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  மேலும் இந்த முகாமில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு கைபேசி மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.