கோவில்பட்டி-ஊத்துபட்டியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி! துணி பைகளை பயன்படுத்த மாணவர்கள் உறுதியேற்பு. தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கம்,தேசிய பசுமை படை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.நாடு முழுவதும் செப்-15 முதல் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கிட சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருளாக துணிப்பை,சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்த வலியுறுத்தி மீண்டும் மஞ்சப்பை என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,ஊத்துப்பட்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும்,திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களை உருவாக்கிடவும்,சுகாதார பழக்கங்களை கடைபிடிக்கவும்,திட மற்றும் திரவகழிவு மேலாண்மைதிட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்திடவும்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்திடவும், குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிடவும்,உறுதிமொழி எடுத்துக் கொண்டு மஞ்சப்பைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தனர்.ஊத்துப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன்,உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் பொதுமக்களுக்கு துணி பைகளை வழங்கி மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.இதில் ஆசிரியர்கள் நிர்மலா,உலகாண்டேஸ்வரி உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.