விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில்,ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நவீன கிட்டங்கிக்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நவீன கிட்டங்கி அமைக்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்படவுள்ள கிட்டங்கிங்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.