விளாத்திகுளத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 90 பேருக்கு இலவச பட்டா வழங்கிய கனிமொழி எம்.பி : ஆசையாக சென்று சிரித்த முகத்துடன் தங்கள் இடத்தை பார்வையிட்ட பயனாளிகள்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள 77 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 13 திருநங்கைகள் என மொத்தமாக 90 பேரின் இலவச பட்டா கோரிக்கை மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விளாத்திகுளம் தாலுகா கே.சுந்தரேஸ்வரபுரத்தில் வைத்து,இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என 90 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர். இலவச பட்டாக்களை வாங்கிய பயனாளிகள் கனிமொழி எம்.பி.க்கு மன மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ஆசை ஆசையாக சென்று தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை பார்த்து மகிழ்வுற்றனர்.வழக்கமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிகள் வட்டாட்சியர் அலுவலகம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆனால், கனிமொழி எம்.பி அறிவுறுத்தலின்பேரில், இலவச பட்டா வழங்கியவுடன் அவர்களது கண் முன்னே அவர்களுக்கான இடத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த 90 பயனாளிகளுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் இடத்தின் அருகிலேயே நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.