தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (21), சுதர்ஷினி (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா நெல்லையில் உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சுதர்ஷினி 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதையெடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் 3 பேரும் முன்னுக்குபின்னாக தகவல் கூறியுள்ளனர். மேலும் செல்வக்குமார் உடற்கூறாய்வில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தை தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் செல்வக்குமார் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் அதை ஊரைச் சேர்ந்த கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட செல்வக்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கிய லட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையறிந்த கந்தவேல், செல்வக்குமாரை கொலை செய்யலாம் என கூறியுள்ளார். அதன்படி சம்பவவத்தன்று இரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை, பாக்கியலட்சுமி, அவரது மகள்கள் சுபாஷினி, கார்த்திகா, கந்தவேல் ஆகியோர் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் காலையில் செல்வக்குமார் குடிபோதையில் தண்ணீர் இல்லாமல் இறந்து கிடந்ததாக அக்கம் பக்கத்தில் தெரிவித்தனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.