அயன் கரிசல்குளத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, "பறவை காவடி எடுத்து, பூக்குழி இறங்கி" நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள அயன் கரிசல்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் வைகாசி மாத பெருவிழாவை முன்னிட்டு இன்று பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே அமைந்துள்ள அயன் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலின் வைகாசி மாத கொடைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டிற்கான திருவிழாவானது கடந்த 27.05.2023 (சனிக்கிழமை) அன்று முகூர்த்தகால் நட்டு, காப்பு கட்டுதல் தொடர்ந்து காமாட்சியம்மன் அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்க சிறப்பாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்ற வந்தன. இந்தநிலையில் திருவிழாவின் இறுதி நாளான இன்று(03.06.2023) சனிக்கிழமை மாலையில் அயன் கரிசல்குளத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மேள தாளங்கள் முழங்க‌.. பால்குடங்கள் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.


அதேபோன்று, இந்தாண்டு விநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீ காளியம்மன் கோவில் வரை பறவை காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் காண்பதற்காகவே கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பக்தி பரவசத்துடன் பறவை காவடியைக் கண்டு, அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.