விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 1001 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முன்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், பன்னீர், ஜவ்வாது, உள்ளிட்ட 16 வகையான திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன்  மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.