விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான மும்பை மாடல்களில் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக தயார் செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் டெண்ட் அடித்து வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் குடும்பமாக விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் சிலைகளைப் போன்று பத்துக்கும் மேற்பட்ட மாடல்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு அடி முதல் 15 அடி உயர விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை சிலைகளை தயாரிக்கும் பணியிலும் ராஜஸ்தான் மாநில கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்தக் கலைஞர்கள் தயாரிக்கும் சிலைகள் தத்ரூபமாக இருப்பதால் இதை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.