"INK YOUR NAIL... WITHOUT FAIL..." முழக்கத்தோடு... பாடல் மற்றும் நடனம் மூலமாக விளாத்திகுளத்தில், "100% வாக்குப்பதிவு" வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!
நாடு முழுவதும் வருகின்ற 19-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் -2024 நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் "100% வாக்குப்பதிவு" விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். அதன்படி, விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியிலிருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளியின் முதல்வர் மாயாதேவி, நிர்வாக அலுவலர் ராகவன் உட்பட ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மதுரை ரோடு, கீழரத வீதி, காய்கறி மார்க்கெட் வழியாக 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்து நிலையம் முன்பு பாடல் மற்றும் நடனம் மூலமாக விழிப்புணர்வில் ஈடுபட்டு அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்தனர். பின்னர் மதுரை ரோடு வழியாக பள்ளியை வந்தடைந்து அங்கு "100% VOTE" என்ற எழுத்துக்கள் போல பள்ளி மாணவர்கள் நின்றவாறும் மாணவர்களை சுற்றி பெரிய வட்டமாக ஆசிரியர்கள் கைகளை பிடித்தபடியும் நின்று 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.