விளாத்திகுளம் அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்த தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு சொந்தமான 5 வாகனங்கள் பறிமுதல்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பகுதிகளில்  லோடு ஆட்டோ மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் தொற்றுநோய்கள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் வந்ததை தொடர்ந்து  எட்டையாபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சரவணன்  திடீரென்று  எட்டையாபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் விற்பனை செய்யும் தனியார் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குடிநீர் மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் விநியோகம் செய்த 5 தனியார் நிறுவனங்களின் குடிநீர் விற்பனை செய்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும்   குடிநீர் விநியோகம் செய்ய உணவு பாதுகாப்பு தர சான்றிதழ்,தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உள்ளிட்ட எந்த ஒரு துறையில் முறையான அனுமதி பெறாமல் குடிநீர் விநியோகம்   பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் விற்பனை செய்த ( கீர்த்திகா, சாய் கிருஷ்ணா   ,கிருஷ்ணா) தனியா நிறுவனங்களை எச்சரித்த பேரூராட்சி நிர்வாகம், உரிய அனுமதி பெற்று குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர், தனியார் நிறுவனங்களிடம் மன்னிப்பு கடிதம் பெற்றுக் கொண்டு வாகனங்களை விடுவித்தனர்.