தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் தீவிரமாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு விளாத்திகுளம் அருகே உள்ள குமாரகிரி சி.கே.டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் கட்ட தேர்தல் பணிகள் குறித்தான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி பணியாளர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தையும் பார்வையிட்டார். பின்னர் விளாத்திகுளம் வட்டாட்சியரும், உதவித் தேர்தல் அலுவலருமான இராமகிருஷ்ணன், வாக்குச்சாவடி பணியாளர்கள் தேர்தல் தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினார். அதுமட்டுமின்றி, வாக்கு இயந்திரங்கள் பற்றியும், தேர்தல் விண்ணப்பங்களின் வகைகள் அவற்றை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பன பற்றியும் எடுத்துரைத்தார். இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்), மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.