விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார், கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன் குளம் கடற்கரை கிராமங்கள். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக உப்பளம் அமைத்து உப்பு உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன் குளம் கிராமங்களில் உள்ள உப்பள நிலங்களை சிப்காட் நிர்வாகம் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழில் செய்வதற்கு ஒப்படைக்கவுள்ளது.இதனை அறிந்த கிராம மக்கள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை எனவும்... ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உப்பளங்களை நம்பியே உள்ளது எனவும்  உப்பள நிலங்களை தவிர்த்து உபயோகத்தில் இல்லாத வேறு நிலங்களை சிப்காட் நிர்வாகம் தொழில் நிறுவனங்களுக்கு கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து 2020 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையில் சிப்காட் நிர்வாகம் நிலங்களை  கையகப்படுத்தி விட்டதாகவும்.... ஆகவே உப்பளங்களை காலி செய்து தர வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் உப்பளங்களில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.சிப்காட் அதிகாரிகள் இன்று கலைஞானபுரம் கிராமத்துக்கு வருகை தந்து தனியார் நிறுவனங்களுக்கு இடத்தை அடையாளம் காண்பித்து ஒப்படைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன்குளம் கிராம மக்கள்,உப்பு உற்பத்தியும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்து கிராம தலைவர் முனியசாமி தலைமையில் சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து உப்பள வழித்தடங்களில் அமர்ந்து கண்டன கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.