விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு: பெண் சமையலர்களிடம் நகங்களை வெட்ட எச்சரிக்கை!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இன்று காலை வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவு கூடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? தேவையான பொருட்கள் சரியாக வருகிறதா? என்பதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி சமையலர்களிடம் கேட்டு சமையலர்களின் கைவிரல்களை காட்ட சொல்லி... நகங்களை வெட்ட வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் எச்சரித்தார்.. அதுமட்டுமின்றி, பள்ளி குழந்தைகளுக்கு சுத்தமான முறையில் உணவுகளை சமைத்து பரிமாற வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் காலை உணவை சாப்பிட்டனர். மேலும், பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி மற்றும் துப்புரவு பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளி நிர்வாக குழுவினர் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் கலந்துரையாடி உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதியளித்துச் சென்றார்.